Sunday, May 29, 2016

இது நம்ம ஆளு & உறியடி - திரைப்பார்வை





'இது நம்ம ஆளு' - சில குறிப்புகள்.

* இத்திரைப்படத்தைப் பற்றி சில வாக்கியங்களில் சொல்ல வேண்டுமென்றால் அழகன் திரைப்படத்தில் 'மம்முட்டியும் பானுப்பிரியாவும்' தொலைபேசியிலேயே நீண்ட நேரம் பேசி காதல் செய்வதை ஒரு பாடலிலேயே அற்புதமாக சித்தரித்து முடித்து விடுவார் பாலச்சந்தர். ஆனால் பாண்டிராஜ் இதை ஒரு முழு நீள திரைப்படமாக இழுத்து.......எடுத்து விட்டார். பொதுவாகவே பாண்டிராஜின் திரைப்படங்களில் செல்போன் என்பது ஒரு அற்புதமான படிமமாக, நவீன நுட்பங்களின் மீதான ஒரு எள்ளலாக இருக்கும். அதற்காக சிம்கார்டு கருகி வெடிக்குமளவிற்கா இழுப்பது?

* 'தள்ளிப் போகாதே' சிங்கிள் பாடலை ஏன் முன்னமே வெளியிட்டோம் என்று ரஹ்மான் நொந்தே போயிருப்பார். அந்த அளவிற்கு இதில் அது சிம்புவின் செல்போன் டோனாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாடலே வெறுத்து விடும் போல. அப்படத்தின் ப்ரோமாவாக இந்த திரைப்படத்தை உபயோகித்திருப்பது ஓர் அநியாயம்.

* சூரி என்கிற ஒரு நபர் மட்டும் இல்லாமலிருந்தால் இந்தப் படத்தை ஆண்டவன் கூட காப்பாற்றியிருக்க முடியாது. அந்தளவிற்கு அவர் தரும் கவுண்ட்டர் வசனங்கள்தான் இம்சையிலிருந்து நம்மைக் காப்பாற்றி சற்றாவது புன்னகைக்க வைக்கின்றன. நாயகனின் அசலான சில குணாதிசயங்களை அப்படியே திரைப்படத்திலும் வைத்து கிண்டலடித்திருப்பதும் அதை சிம்பு ஜாலியாக அனுமதித்திருப்பதும் சுவாரசியம்.

* இந்தப் படத்தின் நடிகர் - இயக்குநர் - இசையமைப்பாளர் தொடர்பான ஈகோ மோதல்கள், நடிகரின் அலப்பறைகள் குறித்து மீடியாவில் பல வருடங்களாக தொடர்ந்து செய்தி வந்து கொண்டேயிருந்தன. அதன் எதிரொலி படத்தில் தெளிவாகத் தெரிகிறது. அந்தளவிற்கு காதல் கோட்டை திரைப்படம் மாதிரி 'நாயகன் - நாயகி' யின் காம்பினேஷன் ஷாட்களே பெரும்பாலும் அல்லாமல் ஒப்பேற்றியிருக்கிறார்கள். காந்தி - கஸ்தூரிபா இருவர் இருக்கும் சில அரிதான வீடியோ புட்டேஜை வைத்துக் கொண்டு 'ஏக் துஜே கே லியே' மாதிரி ஒரு காதல் காவியம் எடுக்க முயன்றதற்கு நிகரான சாதனை இது.

* பாண்டிராஜிற்கு பொதுவாகவே இன்றைய காதலர்களின் பாடி லாங்க்வேஜ், அவர்களின் பிரத்யேக மயக்கங்கள் ஆகியவை நன்றாக தெரிந்திருக்கிறது. 'குட்டிம்மா' 'அம்மு' போன்ற மிக அந்நியோன்யமான வசனங்களை இதில்உபயோகித்திருக்கிறார். வசனங்களின் மூலம் உணர்த்தப்படும் இப்படியொரு இன்டிமெசியான நெருக்கத்தை வேறெந்த தமிழ் திரைப்படத்திலும் நான் பார்த்ததில்லை. போலவே காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன மோதல்களையும் சமாதானங்களையும் கூட சரியான தொனியில் காட்சிப்படுத்தியிருக்கிறாார். சமகால காதலர்கள் இதை நிச்சயம் ரசிப்பார்கள். அவர்களின் மனோபாவங்கள், பிரச்சினைகள் சிறப்பாக மையப்படுத்தப்பட்டுள்ளன.

* நயனதாரா ஓர் அழகான ஆச்சரியம். ஒரு நடிகை இத்தனை வருடம் ஃபீல்டில் இருப்பதே ஒரு சாதனை. அதிலும் மார்க்கெட்டில் எந்தவொரு தொய்வும் இன்றி. இத்தனை காண்ட்ரவர்சிகளையும் தாண்டி. இதில் அப்படி ரசிக்க வைக்கிறார். என்னவொன்று ஒப்பனை, அல்லது காமிராக் கோணம் சரியாக அமையாத நேரத்தில் காந்திமதியின் சாயல் வந்திருப்பதை கவனிக்க வேண்டும். (இதை நான் எழுத நேர்ந்தது ஒரு சோகம், மன்னித்து விடுங்கள் நயன்.)

* திரைக்கதை அது பாட்டிற்கு இஷ்டத்திற்கு அலைந்து கொண்டேயிருக்கிறது. காதல் கோட்டை +அழகம்பெருமாளின் டும்டும்டும் போன்வற்றின் மோசமான கலவை போல. சந்தானம், ஜெய், ஆண்ட்ரியா என்று நிறைய கெஸ்ட் ரோல்கள். படத்தில் எல்லோருமெ கெஸ்ட் ரோல் வந்தது போல்தான் இருக்கிறது.

* ஆயிரம் புகார்களையும் தாண் சிம்பு அடிப்படையில் ஒரு நல்ல நடிகர். சமயங்களில் effortless ஆக நடிக்கக்கூடிய திறமையுள்ளவர். ஆனால் ஏன் தலையில் தானே பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறாா் என்று தெரியவில்லை. சிறந்த இயக்குநர்களாக தேடி அவர்களிடம் தம்மை முழுக்க ஒப்படைத்து விடுவது மட்டுமே அவர் கேரியருக்கு நல்லது. எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிற மாயக்கோட்டையின் உள் அமர்ந்திருந்தால் அடுத்த பிரசாந்த் ஆகி விடும் ஆபத்திருக்கிறது. நாம் தமிழர் சீமான் போன்ற அதீத நம்பிக்கை உடம்பிற்கு ஆகாது.

*பாண்டிராஜின் பசங்க திரைப்படம் எனக்கு அத்தனை பிடிக்கும். சினிமாவுக்குரிய மிகை இருந்தாலும் சிறார்களின் உலகத்தை அத்தனை கச்சிதமாக சித்தரித்த திரைப்படம். பாண்டிராஜ் இனியாவது இப்படிப்பட்ட விபத்துக்களில் சிக்கிக் கொள்ளாமலிருக்கும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.



உறியடி - சமீபத்தில் வந்திருக்கும் கவனத்துக்குரிய திரைப்படம். ஒருவகையில் இது சாதிய அரசியலின் பின்புலத்தை வெளிப்படையாக முன்வைக்கிறது. இன்னொரு வகையில் ஆபத்தான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

ஒரு பிரதேசத்தில் இருக்கும் சின்ன அளவிலான சாதியக் கட்சி எப்படி மெல்ல அரசியல் கட்சியாக உருமாறுகிறது, அதிகாரத்தின் ருசியோடு நகர்கிறது என்பதை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் சித்தரித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டு. குறுகிய வித்தியாச எண்ணிக்கையில் அமையும் வாக்குகள் ஒரு பிரதேச வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஜனநாயக கேலிக்கூத்தின் இடைவெளியை எப்படி இந்த உப்புமா கட்சிகள் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்கின்றன என்பதையும் இந்த அதிகாரப் போட்டியில் நிகழும் யுத்தத்தில் நிகழும் வன்முறையையும் இதன் திரைக்கதை அபாரமான நுண்ணுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.

மது விற்பனை தனி சாராய முதலாளிகளின் கையில் இருந்த காலம், பொதிகை டிவி செய்தி போன்றவற்றின் மூலம் இதன் காலத்தை உணர வைக்க விரும்புகிறார் இயக்குநர். இந்த நோக்கில் ஒரு சாதியக் கட்சியாக துவங்கி ஓர் அரசியல் கட்சியாக இன்று வளர்ந்திருக்கும் மாற்றத்தின் முன்னேற்றத்தை இயக்குநர் சுட்டிக் காட்ட விரும்புகிறார் என்று கொள்ளலாம். கடந்த கால தலைவர்களின் மொள்ளமாரித்தனங்கள் மழுப்பப்பட்டு அவர்கள் திருவுருக்களாக்கப்பட்டு அந்த அடையாளங்களின் பெருமிதங்களை உபயோகித்துக் கொண்டு சமகால சாதிய அமைப்புகள் அரசியல் தளத்தில் முன்னர்வதும் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சாதிய தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் எவ்வாறு வன்முறையின் அடையாளங்களாக விளங்குகிறது என்பதையும். சக்கர நாற்காலியில் நகரும் தலைவர், தன் வளர்ச்சிக்கு அவரை இடையூறாக நினைக்கும் உறவுக்கார அரசியல்வாதி என்று சிலவற்றை சமகால அரசியலுக்கும் பொருத்திப்பார்க்கும் விளையாட்டை சுவாரசியமாக முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த நோக்கில் இத்திரைப்படத்தைப் பாராட்டலாம் என்றாலும் இன்னொரு பக்கம் கல்லூரி மாணவர்களை தொழில்முறை கூலிப்படையினரைப் போல சித்தரிக்கும் போக்கும் அச்சுறுத்துகிறது. அவர்கள் கற்கும் கல்வி அவர்களின் வன்முறைக்குப் பயன்படும் மோசமான முன்உதாரணத்தை எவ்வித சமூகப் பொறுப்புமில்லாமல் பதிவாக்குகிறார் இயக்குநர்.

கல்வி மீது அக்கறையில்லாமல் தொடர்ச்சியான மதுப்பழக்கத்தாலும் வீண் சண்டைகளாலும் சீரழியும் பெரும்பான்மையான மாணவர்களின் போக்கை சரியாகவே பதிவு செய்கிறார். ஆனால் அவர்கள் எவ்வித பின்புலமுமில்லாமல் பழிவாங்குவதற்காக கையில் எடுக்கும் வன்முறையும் அது சார்ந்த குரூரமான சித்தரிப்புகளும் இளைய தலைமுறையினரிடையே எதிர்மனோபாவத்தை விதைக்கும் ஆபத்தும் இருக்கிறது. சாதிய அரசியலும் இளையதலைமுறையும் இணையும் புள்ளியும் சரியாக சொல்லப்படுகிறது. சாதியச் சங்கங்களின் உதவியின் மூலம் படிக்கும் மாணவர்களிடம் சாதிய வெறி என்பது எவ்வாறு விஷம் போல் ஏற்றப்படுகிறது என்பதையும்.

இன்று இணையத்திலும் தங்களின் சமூகப் பெருமிதங்களை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படுத்தும் இளைஞர்கள் இதை கவனிப்பது நல்லது.

இரண்டு மூன்று பேர்கள் தவிர இதர நடிகர்கள் அனைவரும் ஏறத்தாழ புதுமுகங்கள் என்றாலும் ஓவ்வொரு நடிகரையும் இயல்பாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தியிருக்கும் இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது. பட்ஜெட் காரணமாகவோ என்னமோ இதன் மேக்கிங் சாதாரணமாக இருப்பதும், படத்தின் தொடர்ச்சி ஆங்காங்கே தடுமாறுவது போன்ற குறைகள் இருந்தாலும் படத்தின் ஆதார உணர்வை பார்வையாளர்களிடம் பதிய வைப்பதில் இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார்.

படத்தின் ஒரு பகுதியை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொண்டு சாதிய சக்திகளிடம் இளைய தலைமுறையும் வாக்களிக்கும் கனவான்களும் பலியாகாமல் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான செய்தியை இத்திரைப்படம் கவனப்படுத்துகிறது.

***


உறியடி முன் வைக்கும் வைக்கும் வன்முறை அரசியலை விட மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' வைக்கும் அதிகாரத்தை நோக்கி நகரும் மாணவ அரசியல் நூறு மடங்கு உயர்ந்தது என்பேன். நிற்க, மணிரத்னம் என்ற பெயருக்காகவே முகஞ்சுளிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளின் ஊழலும் வன்முறையும் அராஜகமும் 'அதிகாரம்' என்னும் அடிப்படையின் மீது நின்றுகொண்டுதான் ஆட்டம் போடுகின்றன. அவர்கள் வீழ வேண்டுமெனில் அவர்களின் அதிகாரம் எனும் நாற்காலியைப் பறிக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் நடைமுறை அரசியல் தளத்தில் மோத வேண்டும். இரண்டொரு அரசியல்வாதிகளைக் கொன்று போடுவதால் பிரச்சினை தீராது. அந்த இடத்தில் அமர மேலதிக ரவுடிகள் ஆசையுடன் காத்திருப்பார்கள்.

இன்றைய இளையதலைமுறை அரசியல் குறித்து பாராமுகமாகவும் அல்லது அது குறித்து புலம்பிக் கொண்டிருக்காமலும் ஆக்கப்பூர்வமான அரசியல் களத்தில் இறங்க வேண்டும். இதற்கான  மனநிலையை இளமையில் இருந்து உருவாக்குமாறு கல்வித்திட்டங்கள் அமைய வேண்டும். அரசியல்வாதிகளின் சதி அரசியலுக்கு மாணவ சக்தி இரையாகி விடாத விழிப்புணர்வு வேண்டும். பொதுச்சமூகத்தின் பங்கும் இதில் முக்கியம். தங்கள் தொகுதியின் வேட்பாளர் இது போன்ற நேர்மையும் செயல்திறனும் இருந்தால் அந்த இளைய அடையாளங்களை 'சின்ன பையன்தானே' என்று அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கு வாய்ப்பு தர முன் வரவேண்டும்.

தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகும் முடிவு குறித்து வருத்தப்பட்டு நான் எழுதிய போது அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் சொல்லப்பட்டன. அதில் எத்தனை உண்மை? அதில் ஒரு பகுதி உண்மையே என்று வைத்துக் கொண்டாலும் இதை விடவும் பிரம்மாண்ட அளவில் ஊழலையும்  அரசு தரகுகளையும் நிகழத்திக் கொண்டிருக்கும் சக்திகளுக்குத்தானே நாமே மீண்டும் வாய்ப்பளிக்கிறோம்? அது குறித்த எவ்வித வெட்கமும் குற்றவுணர்வும் நம்மிடமில்லையே? எம்.எஸ். உதயமூர்த்தி, டிராபிக் ராமசாமி, சரத்பாபு என்று பொது தளத்தில் நேர்மையாளர்களாக அறியப்படுபவர்கள் அரசியல் களத்தில் நுழையும் போது அவர்களை தொடர்ந்து நாம் வீழ்த்திக் கொண்டுதானே இருக்கிறோம்? கிண்டலடித்துக் கொண்டுதானே இருக்கீறோம்?  இருக்கிற கீழ்மைகளில் குறைந்த பட்ச கீழ்மையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புதான் உள்ள சூழலில் இந்த முயற்சியைக் கூட நாம் ஆதரிப்பதில்லையே?

உறியடி திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகளின் இயல்பை சிலாகிப்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் யதார்த்ததில் அவை எந்த அளவிற்கு உண்மை? தொழில்முறை ரவுடிகளை மாணவர்கள் அடித்து வீழ்த்துவது நிஜத்தில் சாத்தியமா? ஏன் இந்த பகற்கனவை தமிழ் சினிமா தொடர்ந்து விதைக்கிறது? ராம்கோபால் வர்மா இயக்கிய 'உதயம்' திரைப்படத்திலிருந்து இதுதான் கதை. மாணவன் வன்முறை அரசியலுக்குள் சென்று அரசியல்வாதிகளை கொன்று அவனும் ஒரு 'நல்ல' வன்முறையாளனாகிறான். இதுதான் தீர்வா?

இளைய சக்தி  அரசியல் தளத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் போக்கு  அதிகரிப்பதுதான் பழைய பெருச்சாளிகளின் கொட்டம் மட்டுப்படுவதற்கு ஒரே வழி. அதற்காக கதவுகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். தமிழ் சினிமாவும் அதற்கு துணை நிற்கட்டும். 

suresh kannan

No comments: