Sunday, August 24, 2014

ஃபன்றி - தலித் சினிமா - எச்சில் குளத்தில் மூழ்கும் கருங்குருவி


இப்படியொரு காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து தயாராகி வீட்டை விட்டு வெளியில் வருகிறீர்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் உங்களின் மேல் எச்சில் உமிழப்படுகிறது. நீங்கள் துடைத்துக் கொண்டு நகர்ந்தாலும் உங்கள் முகத்திலும் தலையிலும் உடம்பின் மீதும் தொடர்ந்து எச்சில்கள் துப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. துடைக்க துடைக்க மேலும் எச்சில். மனம் வெதும்பி உள்ளூர அழுகையுடன் துடைத்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள். எச்சில்கள் நின்றபாடில்லை. வேலை முடிந்து திரும்பும் போதும் எச்சில் மழையுடன்  வீடு திரும்புகிறீர்கள். பலவகையான எச்சில்களால் நனைந்த சிலை போல உங்களை உணர்கிறீர்கள். கடவுளை நொந்து கொண்டு குளித்து விட்டு உறங்குகிறீர்கள். எச்சில் நீராலான ஒரு குளத்தில் மூழ்கி காற்றுக்காக அல்லாடுவது போல் ஒரு கொடுங்கனவு. அலறியடித்துக் கொண்டு எழுந்து தன்னிச்சையாக உடம்பெங்கும் துடைத்துக் கொள்கிறீர்கள். எப்படியோ அயர்ந்து உறங்கி மறுபடியும் எழுந்து வெளியே வந்து மீண்டும் அன்றைய காலையின் முதல் எச்சிலை வெளியே சந்திக்கிறீர்கள்...

மேலே குறிப்பிட்டது சற்று மிகையான கற்பனையாக இருந்தாலும் சாதிக் கட்டுமானம் என்பது பழமைவாத சிந்தனைகளுடன் இன்னமும் இறுக்கமாக உள்ள இந்திய தேசத்தில் தலித் சமுதாயத்தின் பெரும்பாலானவர்கள் மேற்சொன்னபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தீண்டாமையின் வேர்கள் இன்னமும் பசுமையாகவே இருப்பதின் காரணமாக ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பெருநகரங்களில் சற்று மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் சிறுநகரங்களில் குறிப்பாக கிராமங்களில் தலித் மக்கள் இத்தகைய இருண்ட வாழ்க்கையைதான் காலம் காலமாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . 'நீ தாழ்ந்த சாதியில் பிறந்தவன்" என்று ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தலித் மக்களின் வலி நீடித்துக் கொண்டேயிருப்பதின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் செருப்பணியாமல் அதை கையில் தூக்கி நடப்பது, தேநீர்க்கடைகளின் இரட்டைக்குவள வேறுபாடுகள் என்று அன்றாட நடைமுறை விஷயங்களில் துவங்கி இறந்து போனாலும் கூட பிணத்தை வேறு வழிகளில் சுற்றி எடுத்துச் செல்ல வைக்கும் தீண்டாமைச் சுவர்கள் இன்னமும் அழியாமல் உள்ளன. நாகரிக வளர்ச்சியோ கல்வியறிவின் சதவீத உயர்வோ ஆதிக்கசாதி மனங்களை  பெரிதளவில் மாற்றிவிடவில்லை. சாதி அரசியலும் தன்னுடைய ஆதாயங்களுக்காக இந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாதிமறுப்பு படைப்புகள் இருந்தன. 'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா, இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ' என்கிற சித்தர் பாடல்களில் இருந்து பாரதி வரை அவை  நீண்டாலும் 1990-களில் தலித் இலக்கியம் என்கிற வகைமை தோன்றிய பிறகுதான் தமிழில் தலித் அரசியல் குறித்த முழு பிரக்ஞையோடு படைப்புகள் உருவாகின. இதைச் சார்ந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் இதன் பின்புலத்தில் உருவானார்கள். இதற்கான உந்துதல் கருப்பின இலக்கியத்திலிருந்தும் மராத்தியில் தோன்றிய தலித் இலக்கியத்திலிருந்தும் தமிழிற்கு வந்தது. எழுத்தில்  தமிழுக்கென பிரயேக வகைமை உருவானது போல மிக வலிமையானதொரு காட்சி ஊடகமான சினிமாவில் தலித் சினிமா என்றொரு வகைமை உருவாகவே இல்லை. சாதிய படிநிலையின் உச்சியில் இருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்த போது அந்த பின்புலத்தில்தான் படைப்புகள் உருவாகின. புராணக்கதைகளை மறுஉருவாக்கம் செய்ததின் தன்னிச்சையான தொடர்ச்சியாக  நந்தனார் போன்ற அபூர்வ விதிவிலக்குகள் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டோர்களின் வலியை அதன் பின்புலத்தோடு முழு வீச்சில் சொன்ன சினிமாக்கள் அதுவரை உருவாகவில்லை.

பிராமணர்களின் அதிகாரம் சற்று தளர்ந்த போது அந்த இடத்தை இடைநிலைச் சாதிகள்  கைப்பற்றிக் கொண்டன. நேரடியாக அல்லது மறைமுகமாக அவர்களின் சாதியையும் சாதியத் தலைவர்களையும் நாயகர்களாக ஆராதிக்கும் அவற்றின் தலைப்புகளைக் கொண்ட சினிமாக்கள் உருவாகின. சாதிய மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் இவை காரணமாக இருந்தன. தலித்களின் பிரச்சினைகளைப் பற்றி சில திரைப்படங்கள் மிதமாக உரையாடினாலும் அவை அந்தப் படைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தனவே ஒழிய முழுவதுமாக இல்லை. இதில் முற்போக்கு போலி சினிமாக்களும் கலந்தே இருந்தன. 'தேவர்-ன்றது உங்களோட பட்டமா?" என்று செவிட்டில் அறையும் கேள்வியைக் கேட்ட சிறுவன், பிராமண அடையாளத்திலிருந்த நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. தாழ்த்தப்பட்டோரின் துயரங்களையும் தங்களின் கச்சாப்பொருளாக செரித்துக் கொண்ட வணிக சினிமா அவற்றை ரொமாண்டிசைஸ் செய்ததே ஒழிய உண்மையான அக்கறையுடன் தமிழில் உருவான ஒரு தலித் சினிமா என்பது இன்று வரை இல்லை எனலாம்.

***

இந்த நிலையில் மராத்தி மொழியில்  ஃபன்றி  (Fandry) என்கிற ஓர் அசலான தலித் சினிமா உருவாகியிருக்கிறது  நாகராஜ் மஞ்சுளே இயக்கிய  இத்திரைப்படம் தேசிய அரசு விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. தமிழில் தலித் இலக்கியமானது மராத்தியில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டதைப் போலவே இந்த மராத்தி சினிமாவிலிருந்து உத்வேகத்தைப் பெற்று தலித்களின் வாழ்வியலை சிறப்பாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் தமிழ் சினிமாக்கள் வருங்காலத்தில் உருவாகும் என நம்புவோம்.

பல்லாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஒரு கலைப்படைப்பின் மூலமாக சொல்லும் போது எரிமலை நெருப்பின் தகிப்போடுதான் சொல்ல வேண்டும் என்றில்லை. நகக்கண்ணில் மெல்லிய ஊசியேற்றியும் சொல்லலாம். ஃபன்றி திரைப்படம் மேற்பார்வைக்கு எளிமையானதாகவும் உள்ளுக்குள் பல அடுக்குகளில் கடுமையான அரசியல் விமர்சனங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு சிறந்த தலித் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் நிறைவுறாத காதலின் பின்னணியோடும் யதார்த்தமான அழகியலோடும் தலி்த் மக்களின் துயரத்தை இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. நிற்க.. காதல் என்றவுடனே நீங்கள் நம்தன நம்தன... என்கிற பின்னணியுடனான பாடல் காட்சிகளும்  இறுதிக்காட்சியில் தீப்பந்தங்கள் இளம் காதலர்களை கும்மிருட்டில் துரத்தும் தமிழ் சினிமாக்களை நினைவு கூராதீர்கள். அந்த அபத்தங்கள் எல்லாம் இதில் இல்லை. சாதிய, நிற,வர்க்க வேறுபாடுகளினால் ஓர் இளையமனம் எதிர்கொள்ளும் அவமானங்களின் பெருமூச்சும் கண்ணீரும் இதன் காட்சிகளில் உறைந்துள்ளன. சாதியக் கொடுமைகளைத் தாங்கி தாங்கி அதை ஏற்றுக் கொண்டு கெட்டிப்பட்டுப் போன தாழ்த்தப்பட்ட மக்களின் முந்தைய தலையினரிடமிருந்து விலகி இளைய தலைமுறை அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போராட்டத்தையும் முயற்சியையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது.

நவீன கைபேசிகளும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான உரையாடல்களும் கூட இருந்தாலும் அடிப்படை கழிப்பிட வசதிகள் அற்ற, மஹாராஷ்டிராவில் உள்ள அகோல்நர் என்கிற சிறிய கிராமம். கைக்காடி எனும் வழக்கொழிந்துக் கொண்டிருக்கிற திராவிட வழி மொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடும்பத்தைச் சார்ந்தவன் சிறுவன் ஜாபியா. வறுமையான குடும்பம் என்பதை சொல்லத் தேவையில்லை. சாதி இந்துக்கள் ஏவுவதில் கிடைக்கும் வேலைகளைச் செய்து ஜீவிக்கிறார்கள் அவனது குடும்ப உறுப்பினர்கள். பாதி நாட்கள் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்லவும் மற்ற நாட்களில் பள்ளி செல்வதுமாக இருக்கிறான் ஜாபியா. அவன் ஆர்வமுடன் பள்ளி செல்வதற்கு கல்வியின் மீதுள்ள ஈடுபாட்டையும் தவிர இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. விடலைப் பருவத்துக்கேயுரிய காதல் சக மாணவியான ஷாலுவின் மீது உண்டாகிறது. அல்லும் பகலும் அவள் நினைவாக திரிகிறான். அவளோ உயர்சாதியைச் சார்ந்தவள். வர்க்க வேறுபாடும் உண்டு. தன் நிறத்தைக் குறித்த தாழ்வுணர்வு ஜாபியாவிற்கு உண்டென்றாலும் தன் காதல் என்றாவது உண்மையாகலாம் என்று பகற்கனவு காண்கிறான்.

ஊர் திருவிழா ஒன்றின் சாமி ஊர்வலத்தில் பன்றியொன்று குறுக்கே வந்து இடையூறு செய்ய அதை தீட்டாக கருதி ஊரில் உள்ள பன்றிகளையெல்லாம் விரட்டியடிக்கும் பொறுப்பு ஜாபியாவின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. தன் மகளுக்கு திருமணம் செய்யும் கவலையோடும் நிதி நெருக்கடியோடும் இருக்கும் அவர் தனது குடும்பத்தோடு பன்றிகளை விரட்டும் செயலைச் செய்கிறார். தான் படிக்கும் பள்ளியின் அருகில் சக மாணவர்களின்  முன்னிலையில் அதுவும் தான் விரும்பும் பெண் வேடிக்கை பார்க்க பன்றிகளை துரத்தும் செயலில் ஏற்படும் அவமானத்தில் சிக்கித் தவிக்கிறான் ஜாபியா. சுற்றியுள்ள ஆதிக்க சாதிக்காரர்கள் இந்த குடும்பமே சிரமப்பட்டு பன்றிகளை விரட்டிப் பிடிக்கும் காட்சியை விளையாட்டு போல நின்று ரசிக்கிறார்கள். சாதி குறித்த வசைகளையும் கிண்டல்களையும் குதூகலத்துடன் எறிகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அவர்களை ஜாபியா தாக்கத் துவங்கும் புள்ளியில் படம் நிறைகிறது.

ஒரு தலித்தால்தான் ஒரு சிறந்த தலித் படைப்பை உருவாக்க முடியுமா என்று ஆய்வுக்குரியது என்றாலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே 2011-ல் உருவாக்கிய குறும்படமொன்று ஏற்கெனவே தேசிய விருது பெற்றிருக்கிறது. ஃபன்றியில் நிகழும் சம்பவங்கள் ஏறத்தாழ அவரது சுயஅனுபவங்களே. இவர்தான் அந்த சிறுவன் ஜாபியா என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமென்பதில்லை. ஜாபியாவின் தந்தையாக நடிக்கும் நபரைத் தவிர மற்ற அனைவரும் தொழில்முறை சாராத நடிகர்களே. இதில் சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே உள்ளிட்ட மற்ற அனைவருமே அத்தனை இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஜாபியா எனும் பிரதான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சிறுவன் சோம்நாத் அக்வாடை இதில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மூன்று மாதத்திற்கும் மேலாக முயன்றிருக்கிறார் இயக்குநர். பொதுவாக சிறுமுதலீட்டில் உருவாகும் கலை சார்ந்த திரைப்படங்களின் உருவாக்கம் அழுது வடியும் ஒளிப்பதிவோடு மந்தமாக நகரும். ஆனால் இதன் ஒளிப்பதிவாளரான விக்ரம் அம்லாடியின் அபாரமான திறமையினால் காட்சிகள் மிகுந்த அழகியலோடு பதிவாகியிருக்கின்றன. அவசியமான இடங்களில் மாத்திரம் ஒலிக்கும் அலோக்நந்தாவின் பின்னணி இசை காட்சியின் அர்த்தங்களை கூட்டுகிறது. இத்திரைப்படம் விருது விழாக்களைத் தவிர வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

***

இந்து புராணத்தின்படி  மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது வராக அவதாரம். பன்றியைக் குறிப்பது. ஆனால் இத்திரைப்படம் முழுவதும் பன்றி என்பது தீண்டாமையின் குறீயீட்டுடன் இயங்குகிறது. அந்தக் கிராமத்தின் ஆதிக்கசாதி மக்கள் அங்கு மேயும் பன்றிகளை வெறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களையும் அதே சொல்லினால்  கிண்டலடிக்கிறார்கள். மேலே பட்டாலே தீட்டு என்று அலறுகிறார்கள். இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே திரைக்கதையை அடுக்கியிருக்கும் விதமே மிகுந்த நுண்ணுணர்வுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு காட்சியில் சிறுவன் ஜாபியா புத்தகம் கேட்கும் சாக்கில் ஷாலுவிடம் பேசலாமா என்று தயங்கி வருகிறான். அவள் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் பன்றி ஒன்று குறுக்கே ஓடிவந்து ஒரு மாணவி மீது தீண்டிச் செல்கிறது. ஷாலு சிரிப்புடன் பன்றி தீண்டிய மாணவியை யாரும் தொடாதீர்கள் தீட்டு' என தடுக்கிறாள். இதைப் பார்க்கும் ஜாபியா முகம் சுருங்கிப் போய் திரும்புகிறான். பன்றி ஏற்படுத்திய தீட்டை பசுமாட்டின் சிறுநீர் கொண்டு கழிக்கிறார்கள். பன்றியை வெறுக்கும் ஷாலு ஓர் ஆட்டுக்குட்டியை பிரியத்துடன் தடவிக் கொடுக்கிறாள். இது போன்ற காட்சிகளில் உள்ள நுட்பமான சாதிய முரண்களை இயக்குநர் எந்த அண்மைக் கோணமும் கொண்டு பிரத்யேகமாக பார்வையாளர்களுக்கு கவனப்படுத்துவதேயில்லை. இவை இயல்பாகவே நகர்கின்றன. பார்வையாளர்களுக்குத்தான் இளம் தலைமுறையினரிடமும் தன்னிச்சையாக பரவியிருக்கும் சாதிய உணர்வின் அழுத்தம் குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது.

இன்னொரு காட்சியில் ஷாலுவின் தந்தை ஜாபியாவிடம் அவரது வீட்டு நீர்தொட்டியில் மாட்டியிருக்கும் பன்றிக்குட்டியை எடுத்துப் போடச் சொல்லி ஆணையிடுகிறார். ஜாபியா அந்த வயதுக்கேயுரிய சுயமரியாதையுடன் அதை மறுத்து சென்று விடுகிறான். ஊர் பெரியவர்களை பகைத்துக் கொள்ளாதே என்று ஜாபியாவின் தந்தை கண்டிக்கிறார். அன்றிரவு அவனுக்கு ஒரு கொடுங்கனவு வருகிறது. கிணற்று நீரில் மூழ்கி உயிருக்கு அல்லாடுவதைப் போல. திடுக்கிட்டு எழுகிறான். அந்த பன்றிக்குட்டியின் நிலையின் அவனுடைய நிலையும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

பன்றிகளைப் போலவே கருங்குருவி ஒன்றும் திரைப்படம் நெடுக ஜாபியாவின் நிறைவேறாத காதலின் குறியீடாக வருகிறது. கருங்குருவி ஒன்றை எரித்து அதன் சாம்பலை தான் விரும்புகிற பெண்ணின் மீது வீசி விட்டால் அவள் வசியத்தில் மயங்கி தன்னை விரும்புவாள் என்கிற உபதேசத்தின் காரணமாக படம் பூராவும் கருங்குருவியை துரத்திக் கொண்டே இருக்கிறான் ஜாபியா. ஆனால் அதுவும் ஷாலுவைப் போலவே இவனுடைய கைக்கு கடைசிவரை அகப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது அகப்படாது என்பது அவனுடைய உள்ளுணர்விற்கு தெரிந்தேயிருக்கிறது. எனவேதான் ஷாலுவிற்கு எழுதும் ஒரு கடிதத்தில் "என்னைப் பிடிக்கவில்லையென்றால் யாரிடமும் சொல்லி அவமானப்படுத்தி விடாதே" என்கிறான். ஆனால் அந்தக் கடிதம் தரப்படாமலேயே அழிந்து போகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அறியாமையிலிருந்து பிறக்கும் மூடத்தனங்களின் அடையாளத்துடன் இந்த கருங்குருவி பறக்கிறது.

தலித் இளைஞர்கள் வன்னிய சாதிப் பெண்களை ஜீன்ஸூம் கூலிங்கிளாஸூம் அணிந்து மயக்குகிறார்கள் என்று தமிழகத்தின் சாதிக்கட்சி அரசியல் தலைவர் சொன்ன விஷயம், ஜாபியாவிற்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஜீன்ஸ் வாங்குவது அவனது கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவளது தாயோ இதோ அதோ என்று போக்கு காட்டி வெறுப்பேற்றுகிறார். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதற்கு மேலேயுள்ளவர்களை கவனித்து அதை அடையும் ஆசையை ஏற்படுத்திக் கொள்வது மிக இயல்பான விஷயம்தான். தன்னுடைய ஜீன்ஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ள தானே உழைக்கிறான் ஜாபியா. ஆனால் அவனது அந்த எளிய கனவு கூட நிறைவேறாமல் அழிந்து போகும் கருணையின்மை மிக இயல்பாக நிகழ்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி காட்சிகளின் மூலம் இயக்குநர் பார்வையாளர்களின் கண்களில் எதையுமே திணிப்பதில்லை. ஆனால் நாம் புரிந்து கொள்ள பல விஷயங்கள் அதில் பொதிந்துள்ளன. சமீபத்திய தமிழ் சினிமாவான "மூடர் கூடத்தில்" அடித்தட்டு இளைஞனொருவன் "காதல் தோல்வி-ன்றதெல்லாம் நம்மைப் போல ஏழைகளுக்கு ஒரு ஆடம்பரமான விஷயம்" என்று சக இளைஞன் ஒருவனுக்கு உபதேசிப்பான். காதல் தோல்வி மட்டுமல்ல காதல் என்பதே அடித்தட்டு மக்களுக்கு ஆடம்பரம்தான்.அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வுகளுக்கே உழைக்கும் நேரம் சரியாக இருக்கும் போது காதலிப்பதற்கு நேரம் கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி ஏற்படும் காதல் உயர்சாதி பெண்ணின் மீது என்றால் அது திருமணத்தில்தான் முடியும் என்கிற நிச்சயமுமில்லை. ரகசிய திருமணத்தில் முடிந்தாலும் அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஆணோ, பெண்ணோ உயிரோடு இருக்க முடியுமா என்பதையே அது தொடர்பான சாதிய வன்முறைச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்திய தமிழக நிகழ்வான இளவரசன்-திவ்யா விவகாரம் இதற்கொரு சரியான உதாரணம்.

ஒரு சிறந்த சிறுகதையின் இறுதி வரியைப் போல, அதன் முற்றுப் புள்ளியைப் போல இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சட்டகம் மிகச் சிறப்பாக உறைந்து நிற்கிறது. ஜாபியாவின் குடும்பம் பன்றிகளைத் துரத்தி இங்குமங்குமாக ஓடுகிறது. ஜாபியாவோ அவமானத்தில் குறுகி அவ்வப்போது ஒளிந்து கொள்கிறான். அவனை ஒரு பன்றியைப் போலவே கல்லால் அடித்து வேலையைத் தொடரச் செய்கிறார் அவனது தந்தை. பன்றிகள் போக்குக் காட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவை அருகே வந்து அகப்படும் நேரத்தில் அருகேயுள்ள ஜாபியாவின் பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கிறது. அருகே கடந்து செல்லும் பன்றியை பிடிக்க முடியாத எரிச்சலுடன் ஜாபியாவின் குடும்பம் உறைந்து அப்படியே நிற்கிறது. சாதியங்களால் கட்டப்பட்டிருக்கும் இந்திய தேசிய அரசியலின் சூட்சுமக் கயிறுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன என்கிற செய்தியை இதை விடவும் சிறப்பாக சொல்லி விட முடியுமா என தெரியவில்லை.

பன்றிகளைத் துரத்திப் பிடிக்க  ஜாபியாவின் குடும்பம் படும் சிரமத்தைப்  பார்த்து அதை நகைச்சுவைக் காட்சியாக கண்டு ஷாலு உட்பட அவனின் சக மாணவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டியை பார்க்கும் சுவாரசியத்துடன் ரசிக்கிறார்கள். ஆதிக்கசாதி இளைஞர்கள் இவர்களை சாதிய வசைகளுடன் கிண்டலடிக்கிறார்கள். தந்தையிடம் அடிவாங்கிய ஜாபியா அந்த முரட்டுக் கோபத்துடன் ஆவேசத்துடன் இயங்கி ஒரு பன்றியைப் பிடித்து விடுகிறான். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக அரசியல் ரீதியாக போராடிய அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் சுவர் ஓவியங்களின் பின்னணியில் கட்டப்பட்ட பன்றி எடுத்துச் செல்லப்படுவது ஒரு குரூரமான நகைச்சுவை. தொடர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களில் ஒருவனை ஆவேசத்துடன் தாக்கத் துவங்குகிறான் ஜாபியா. தாக்கப்பட்டவன் இவனை அடிப்பதற்காக வரும் போது ஜாபியா எறியும் கல் பார்வையாளர்களை நோக்கி வருவதுடன் காட்சி உறைகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு கொதிந்தெழும் ஒரு இளைய தலைமுறையினரிடமிருந்து எறியப்படும் அந்தக் கல் நம்முடைய அகத்தில் ஏற்படுத்தும் வலியையும் மீறி நம்முடைய சாதிய மனங்கள் தொடர்ந்து இயங்கும் என்றால் நாம் மனிதர்களாக வாழவே தகுதியில்லை.

- உயிர்மை - ஆகஸ்டு 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

5 comments:

லேகா said...

அருமையான பதிவு சுரேஷ்.சப் டைட்டில் இல்லாமல் இப்படத்தை பார்ப்பது தாமதமாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க பக்கத்தில் கமெண்ட்...:)

சேக்காளி said...

//அவனது அந்த எளிய கனவு கூட நிறைவேறாமல் அழிந்து போகும் கருணையின்மை//
தாழ்த்தபட்டவர்களின் எளிய கனவுகள் கூட நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக கடவுளும் பாடுபடுகிறார் என்பதை தான் ஜாபியாவின் மிதிவண்டியை விபத்துக்குள்ளாவதன் மூலம் காட்சிப்படுத்தியுள்ளாரோ இயக்குநர்.

ezhil said...

இங்கே பரவாயில்லை என்பது போல் வட நாட்டில் இன்னம் சாதியம் தன் வேர்களை இறுகப் பற்றியிருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது என எண்ணுகிறேன்... பார்க்கணும்...

Anonymous said...

சிறிய உதவி செய்யுங்கள்.dynamic viewsஐ enable செய்யுங்கள். செய்யாத தவறுக்கு தண்டனை பெறும் ஒருவனைப் பற்றிய படம் ஒன்ரை எழுதியிருந்தீர்கள். அதன் பெயர் தெரியவில்லை. அதை டைனமிக் வீயூஸ்சில் உடனே பிக்சரை வைத்து கண்டுபிடிக்கலாம். அல்லது அப்படம் எதுவோ அதன் லின்க்கை மட்டும் நீங்களே இங்கே காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் செய்து விடவும். தேட முடியவில்லை.

Anonymous said...

Tamil movie Varnam also had a similar story line... since that movie didn't get any award, it just totally got lost!!